சேலம் கட்சராயன் ஏரியை ஸ்டாலின் பார்வையிடலாம்- ஹைகோர்ட் உத்தரவு
திமுகவினர் தூர்வாரிய கட்சராயன்பாளையம் ஏரியை ஸ்டாலின் பார்வையிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: சேலம் கட்சராயன்பாளையத்தில் திமுக தூர்வாரிய ஏரியை ஸ்டாலின் பார்வையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுக வினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரினர். அந்த ஏரிக்குள் நுழைந்த அதிமுகவினர் கரைகளை உடைத்து, சேதப்படுத்தி சட்ட விரோதமாக மண் அள்ளிச் செல்வதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவினர் மணல் அள்ளுவதும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அமைதிப் பேச்சு திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஸ்டாலின் ஏரியை பார்வையிட காவல்துறையினர் தடை விதித்தனர். தடையை மீறி ஏரியை பார்வையிடுவேன் என்று அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். நேற்று தடையை மீறி சேலம் செல்ல முயன்ற ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து திமுகவினர் தூர்வாரிய ஏரியை ஸ்டாலின் பார்வையிட போலீஸ் தடுப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் இளங்கோ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.