அரவக்குறிச்சி தேர்தல்: தேர்தல் ஆணையம், அதிமுக, திமுக பதில் தர ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: அரவக்குறிச்சியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனுவை நிராகரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் அய்யம்பாளையம் ராஜேந்திரன் என்பர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமிக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றபோது பணப் பட்டுவாடா புகார் காரணமாக, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 232 தொகுதிகளில் மட்டுமே சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக 89 இடங்களில் வென்று வலுவான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது.
இதனிடையே திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ சீனிவேல் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தொகுதியில் 6 மாதங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதால் நவம்பர் 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும்
நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியின் அதிமுக வேட்பாளரக செந்தில் பாலாஜி மீண்டும் களமிறங்குகிறார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை நிராகரிக்க வலியுறுத்தி, வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் அந்த தொகுதியின் திமுக வேட்பாளராக பழனிச்சாமி அறிவிக்கப்பட்டால், அவரது வேட்பு மனுவையும் நிராகரிக்க வேண்டுமென அந்த மனுவில் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.