ஜாமீனுக்காக சீமை கருவேல மரங்களை வெட்டச் சொல்வது சட்ட விரோதம்- ஹைகோர்ட் 'சுளீர்'
ஜாமீன் வழங்க கருவேல மரங்களை வெட்ட நிபந்தனை விதிப்பது சட்ட விரோதம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் அறிவுறுத்தியுள்ளார்
சென்னை: ஜாமீன் வழங்க கருவேல மரங்களை வெட்ட நிபந்தனை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என கீழ்நீதிமன்றகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிபதிகள் கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஞானம் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் வழக்கில் ஒருவர் தண்டனை பெறும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் மட்டுமே என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் எனவும் நீதிபதி தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜாமீன் கேட்பவர்களை கருவேல மரங்களை வெட்டச் செல்வது மனித உரிமை மீறல் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஜாமீன் கேட்பவர்களை கருவேல மரங்களை வெட்டச் செல்வது சட்ட விரோதம் என்றும் நீதிபதி தேவதாஸ் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை நடைபெறும் போதே தண்டனை அளிக்கும் விதமாக மரங்களை வெட்ச்சொல்வது ஏன் என்றும் நீதிபதி தேவதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் ஜாமீனில் வெளிவருவோர் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 20 நாட்களுக்குள் 100 சீமைக்கருவைகளை அகற்ற அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல கோவில்பட்டி அருகிலுள்ள தீ்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் திருட்டு வழக்கில் கைதானார். ஜாமீன் கேட்டு அவர் இன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி வீரணன், முருகன் ஊரிலுள்ள 25 சீமைக்கருவேல மரங்களை வேறோடு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார்.
ஊடகங்களில் இந்த செய்தி வெளியானது. கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.