தாலி அகற்றும் போராட்டம் முடிந்த பின்னர் தடை விதித்த ஹைகோர்ட் பெஞ்ச்
சென்னை: கடும் எதிர்ப்புக்கிடையே திராவிட கழகத்தினர் தாலி அகற்றும் போராட்டம் நடத்தி முடித்த நிலையில் உயர்நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்துள்ளது.
திராவிடர் கழகம் சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, நிபந்தனையுடன் அனுமதி வழங்கியதோடு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறும் திராவிட கழகத்தினரை அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்கவிருந்த நிலையில் காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியை காலை 7 மணிக்கே திராவிடக்கழகம் தொடங்கி நடத்தி முடித்தது. நீதிபதி அக்னிஹோத்ரி வீட்டில் 8 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
இதற்கிடையே திராவிட கழகத்தினர் ஏராளமான பெண்களின் தாலிகளை அவசரம் அவசரமாக அகற்றி போராட்டத்தை நடத்தி முடித்தனர். இந்தநிலையில் உயர்நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.