புதிய வாகனம் வாங்க டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவுக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை
ஓட்டுநர் உரிமம் இருந்தால் தான் புதிய வாகனம் வாங்க முடியும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை: அசல் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால்தான் புதிய வாகனம் வாங்க முடியும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழும் அதிகப்படியான விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அசல் ஓட்டுநர் உரிமம் இருந்தால் தான் வாகனத்தை இயக்க முடியும் என்றும் வாகனங்கள் வாங்க முடியும் என்றும் தெரிவித்தது.
இதில் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் புதிய வாகனங்கள் வாங்குவோர் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வாகன விற்பனை முகவர்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உத்தரவால் நடைமுறை சிக்கல் இருப்பதாக மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், புதிய வாகனம் வாங்க அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து வாகன விற்பனை முகவர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வாகனம் வாங்கும் பலர் தங்களது வாகனங்களை இயக்க ஓட்டுநரை அமர்த்திக் கொள்கின்றனர். எனவே அரசின் இந்த உத்தரவு நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று என குறிப்பிட்டிருந்தது.
புதிய வாகனங்கள் வாங்குவோர் அனைவரும் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக வாகனங்கள் வாங்குவார் என கூற முடியாது என்றும் வாதிடப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.