ஆக்டிங் சி.எம்.நான்தான்... ஆட்டம் போட்டவரை அடக்கிய தலைமை...
சென்னை: சிங்கம் படுத்தா... எலி கூட கபடி வெளையாட கூப்பிடுமாம்... அந்த கதையாக ஆளுங்கட்சித்தலைவர் வழக்கில் சிக்கி சிறைக்கு போன நாளில் இருந்தே எதிர்கட்சியில் ஆள் ஆளுக்கு முதல்வர் கனவில் வலம் வந்தனர்.
கட்சிக்கு உள்ளேயே முதல்வர் கனவில் வலம் வந்தவர்கள் பலர் இருக்கின்றனர். எல்லாம் ஜோசியமும், ஜாதகமும் படுத்திய பாடுதான். இதற்கான வேண்டாத தெய்வமில்லை...செய்யாத நேர்த்திக்கடன் இல்லை. எதிர்கட்சியினர் கூட கேலி செய்யும் அளவிற்கு தீச்சட்டி கோவிந்தன்களாக வலம் வந்தனர் அமைச்சர்கள்.
எல்லாருக்கும் தெரிந்து நடந்த வேண்டுதல் ஒருபுறம் இருக்க முதல்வர் பதவிக்காக திருச்செந்தூரில் விசேச பூஜை செய்தாராம் ஒரு அமைச்சர். அதுவும் திருச்செந்தில் ஆண்டவரின் பெயரை பாதியாகக் கொண்ட அந்த அமைச்சருக்கு முதல்வர் பதவி மீது அப்படி ஒரு மோகமாம். கூட இருந்தவர்களும் உசுப்பிவிட திருச்செந்தூர் மூலவருக்கு பின்புறம் உள்ள பஞ்சலிங்கத்திற்கு தனி அபிசேகமே செய்தாராம். இந்த தகவலை கார்டன் வரை கொண்டு போனது அந்த நடிகர்தானாம். நடிகருக்கு திருச்செந்தூர் கோவிலில் தனி செல்வாக்கு உண்டாம்.
அதுமட்டுமல்லாது, உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் வெளிநாடு சிகிக்சைக்குப் போனால் தான்தான் ஆக்டிங் சி.எம். என்று நண்பர்கள் மத்தியில் ரகசியமாக பேசியதை டேப் செய்து கார்டனில் போட்டுக்கொடுத்து விட்டார்களாம். இது ஒருபுறம் இருக்க கரூரில் உள்ள அதிமுக பிரமுகரின் மகனை அம்மாவை சந்திக்க விடாமல் செய்ததில், அமைச்சராக இருந்தவருக்கு முக்கிய பங்கு உண்டாம். தங்கப்பதக்கம் பெற்ற தம்மை சந்திக்க விடாமல் தடுக்கிறார் என்று பத்திரிகையில் பேட்டி தட்ட, அது கார்டனை எட்டியது.
அன்றிலிருந்தே அமைச்சருக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. சொந்தக்கட்சிக்காரர்களை அலைக்கழித்த புகாருடன் கூடவே துறை ரீதியான புகார்களும் சேர்ந்து கொள்ள வகையாக சிக்கிக்கொண்டார். அமைச்சர் பதவியில் இருந்து இறக்கிய கையோடு கட்சிப்பதவியில் இருந்தும் தூக்கியடிக்கப்பட்டாராம். விதி வலியது என்பதை அறியாதவரா அவர்.