செக்ஸ் டார்ச்சரால் ஆசிரியை தற்கொலை..தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை..புதுக்கோட்டையில் பரபரப்பு!
பாலியல் தொல்லையால் அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: பாலியல் தொல்லை காரணமாக ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.
இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக மதிவாணன் உள்ளார். இவர் புவனேஸ்வரிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி, கடந்த 7.5.2015ம் தேதி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மதிவாணனை அதிரடியாக கைது செய்னர். இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி, குற்றம்சாட்டப்பட்ட மதிவாணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளார்.