கழுத்தை நெறித்த கடன் சுமை - சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியர்
சேலம்: சேலத்தில் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் கள்ளிகாடு பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் குணசேகரன். இவர் பெரியப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி உஷா. இவர் மேட்டூர் புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
குணசேகரன் சொந்தமாக வீடு கட்டவும், கார் வாங்கவும், ஆடம்பரமாக வாழ விரும்பியுள்ளார். அதற்காக பல இடங்களில் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடன்களை அடைக்க முடியாமல் தம்பதியினர் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடன் காரணமாக மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த முடியாததால் குணசேகரன் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை இரவு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் படுக்கையறையில் குணசேகரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஓமலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.