திமுக ஆட்சியில் தான் முழு உடல் பரிசோதனை திட்டம் கொண்டு வரப்பட்டது... சொந்தம் கொண்டாடும் கருணாநிதி
சென்னை: ஜெயலலிதா அறிவித்துள்ள முழு உடல் பரிசோதனை திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
'தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் பேரவைக்கு 110வது விதியின் கீழ் அறிக்கை படிப்பதற்காக மட்டுமே வருகை தந்து, படித்து விட்டுப் போய் விடுகிறாரே, இந்த அறிவிப்புகளுக்கு ஏதாவது பொருள் இருக்குமென்று கருத முடியுமா?
அதிலும் முக்கியமான திட்டம் என்னவென்றால், 'அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்படும் என்பதுதான். அதுவும் ஏதாவது புதிய திட்டமா என்றால் கிடையாது. ஏற்கனவே மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் திட்டம்தான்.
அதாவது, ரத்த பரிசோதனை, ரத்தக் கொழுப்புப் பரிசோதனை, இதயப் பரிசோதனை போன்றவைகளை மருத்துவமனைகளிலே செய்து கொள்ளும் திட்டம். இதைத்தான் ஏதோ புதிய கண்டுபிடிப்பைப் போல அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு உடல் பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்கிட தி.மு.க. ஆட்சியிலேயே 11-6-1999 அன்று ஆணையிடப்பட்டுள்ளது. முதல் அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய அரசாணையை வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அதிலும், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆண்களுக்கான திட்டமாம். 'அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம்' என்பது மகளிருக்கான திட்டமாம். இப்படி ஒரு அறிவிப்பு. இதையே கிராமத்தில் செய்துகொண்டால், அதற்கு 'அம்மா ஆரோக்கியத் திட்டம்' என்று பெயராம்.
இன்னும் சொல்லப் போனால் கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக 'வருமுன் காப்போம் திட்டம்' என்ற பெயரிலே தி.மு. கழக ஆட்சியிலேயே 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.
இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.