என்ன அநியாயம் பாஸ் இது.. இன்னும் வெயில் குறையலேயே.. சென்னையில்!
சென்னை: அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் என்று சொல்லிக் கொண்டு சென்னை நகர மக்களை சூரிய பகவான் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது அதெல்லாம் போய் பல நாட்களாகியும் கூட இன்னும் வெயில் குறைந்தபாடில்லை.
வெளியில் தலை காட்டினால் வெயில் வெளுத்து எடுக்கிறது. தலையெல்லாம் சுடுகிறது. வியர்த்துக் கொட்டுகிறது. பேன் இல்லாமல் உட்கார முடியவில்லை.
பகல் நேரத்தில் நன்றாக காற்று வீசினாலும் கூட வெயிலும் கூடவே இருப்பதால் வெளியில் அதிகம் அலைய முடியாத நிலை உள்ளது. இரவில் சில இடங்களில் திடீர் திடீரென மழையும் பெய்கிறது.
அக்னி நட்சத்திரம்...
தமிழகத்தில் மே 4ம் தேதி அக்னிநட்சத்திர வெயில் தொடங்கியது. தொடங்கிய நாளிலேயே பல ஊர்களில் வெயில் சதம் போட்டது. பல ஊர்களில் முதல் நாளிலேயே மழை கொட்டித் தீர்த்தது.
சென்னை மக்கள்...
கத்திரி தொடங்கிய முதல் நாளிலிருந்து பல ஊர்களில் மழை கொட்டிதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சென்னை மக்கள்தான் காய்ந்து போனாரக்ள். காரணம் தொடர்ந்து விளாசித் தள்ளிய கடும் வெயில்.
109 டிகிரி வெயில்...
வெப்பச் சலனம் காரணமாக சில நாட்களில் மழை பெய்தது. ஆனால் அனல் பறக்க வெயில் வெளுத்தெடுத்தது. அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரி வெயில் வரை பதிவாகியது.
காற்று வீசுகிறது...
அக்னி நட்சத்திரம் முடிந்து பல நாட்களாகி விட்டது. ஆனாலும் வெயில் குறைந்தபாடில்லை. சென்னை முழுவதும் வெயில் அடித்தபடியே உள்ளது. இருப்பினும் பகல் நேரத்தில நன்றாக காற்று வீசுகிறது.
கொளுத்தும் வெயில்...
காற்று வீசுவதால் பெரிய அளவில் புழுக்கமோ வெட்கையோ இல்லை என்றாலும் கூட வெயில் அதிகமாக இருப்பதால் வெளியில் தலை காட்டமுடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவில் மழை...
இரவில் சில நேரங்களில் மழை பெய்கிறது. அதேசமயம் பகல் நேர வெப்ப நிலை நார்மல் அளவில்தான் உள்ளது. இருப்பினும் வெயில் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது.
ஈரப்பதம்...
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், ‘வழக்கமாக நிலத்தில் காற்றின் அழுத்தம் குறையும்போது கடலில் உள்ள ஈரப்பதமான காற்று நிலப்பகுதிக்கு வரும். அப்படி வரும்போது வெப்ப நிலை வெகுவாக குறையும்.
வெயில் குறையும்...
தற்போது ஈரப்பதமுள்ள காற்று சற்று வீசி வருவதால் சென்னையில் வெயிலின் அளவு ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இந்த காற்றின் ஈரப்பத சதவீதம் அதிகரிக்கும்போது வெயில் முழுமையாக குறையும் என்றனர்.