அனல் காற்று வீசுதே..... பற்றி எரியும் திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு
திருத்தணியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது. 10 மணியிலேயே 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் அனல் காற்று, பல மாவட்டங்களில் சூறைக்காற்று என தாக்கி வருகிறது. திருத்தணியில் காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது. 10 மணியிலேயே 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல பகுதிகளில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூரில் 110 டிகிரி கொளுத்தியது. மாலை நேரத்தில் திருத்தணியில் மழை பெய்து குளுமையை ஏற்படுத்தியது.
வெயில் மற்றும் வெப்பம் காரணமாக சிவகங்கை, திண்டுக்கல், வாடிப்பட்டி உள்ளிட்ட உள் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதனால் அந்த பகுதியில் சற்று வெப்பம் தணிந்தது.
கடந்த வாரம் முதல் தெற்கு ஆந்திராவில் அனல் காற்று வீசிவருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் சில இடங்களில் நேற்றும் அனல்காற்று வீசியது. இன்றும் காலை முதலே பல மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது.
தெற்கு ஆந்திராவில் அனல் காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் வடமேற்கு மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணிகிரி, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதலே திருத்தணி, வேலூரில் அனல் காற்று வீசுகிறது. காலை முதலே 110 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வெயில் மற்றும் வெப்ப காற்று வீசுவது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.