இன்னும் 2 நாளைக்கு அனல் காற்றுதான் வீசுமாம்.. வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்து வரும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அனல் காற்று வீசி வருகிறது. இதனால் வெளியில் தலைகாட்டவே மக்கள் அஞ்சியுள்ளனர். பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி தமிழக மக்களை வெப்பம் துன்புறுத்தி வருகிறது.
1908ம் ஆண்டு 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதன் பிறகு 110 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை அதிகபட்ச வெப்பத்தை கண்டுள்ளது. இது மிக அதிகப்பட்சம் என்று கூறப்படுகிறது.
வெப்ப அலை
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட குறிப்பிடப்பட்ட 18 மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்தது.
எச்சரிக்கை
மேலும், அனல் காற்று வீசும் நேரமான பகல் 12 மணி முதல் 3 மணிவரை மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே மக்கள் 10 மணிக்கு மேல் வெளியே வருவதில்லை. சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது.
இன்னும் வெயில்
இந்நிலையில், இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் பிறப்பதற்கு முன்னே இப்படி காய்கிறோமே என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.
எங்கெல்லாம் மழை?
அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக உள் மாவட்டங்களில் வெயில் பின்னி பெடல் எடுத்த நிலையில், இந்த அறிவிப்பு சற்று ஆறுதலாக உள் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.