ஓசூரில் கனமழை... காட்டாற்று வெள்ளத்தில் உடைந்த பாலம் - வீடியோ
ஓசூரைச் சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தொட்டெல்லா ஆற்றின் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
ஓசூர்:ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதில் ஓசூருக்கு அருகேயுள்ள அஞ்செட்டி என்னும் ஊரில் தொட்டெல்லா ஆற்றைக் கடப்பதற்காக அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது. மேலும், அங்கு தற்காலிகமாக தரைப்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது பெய்து வரும் கனமழையினால் உண்டான வெள்ளத்தில் தரைப்பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. மேலும், அங்கு நடைபெறும் மேம்பால பணிக்காக வைக்கப்பட்டிருந்த கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
தரைப்பாலம் உடைந்த காரணத்தால் ஓசூர்-அஞ்செட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் எங்கும் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.