குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
குற்றாலம்: தமிழகத்தில் பெய்து வருகின்ற கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக அந்த 3 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களை குற்றாலத்தில் கழிப்பதற்காக வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.