கிழிந்த சாக்குகளில் ரேஷன் சப்ளை... வீணாக சிந்தி லட்சக்கணக்கில் நஷ்டம்!
நெல்லை: பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளுக்கு பொருட்களை கிழிந்த சாக்குகளில் அனுப்புவதால், அவை யாருக்கும் உபயோகமின்றி கீழே சிந்தி வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பல்வேறு வடமாநிலங்களில் இருந்து நெல்லை உள்பட தென் மாவட்டங்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக அவ்வப்போது கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் ரயில்களில் கொண்டு வரப்படுகிறது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் டன் கணக்கில் கொண்டு வரப்படும் கோதுமை மற்றும் அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புகின்றனர்.
இந்த மூட்டைகளில் பெரும்பாலானவை கிழித்த கந்தலாக இருக்கின்றன. இவற்றை தைத்து பாதுகாப்பாக அனுப்பாமல் அப்படியே அனுப்பி விடுகின்றனர். இதனால் வழியிலேயே இவை பெட்டிகளில் ஓழுகி வீணாகின்றன. இந்த மூட்டைகள் ரேசன் கடையை அடையும் போது சுமார் 6 கிலோ அளவுக்கு எடை குறைத்து போய் விடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஒரு வேலை உணவுக்காக பலர் ஏங்கும் நிலையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் பொறுப்பற்ற முறையில் எடுத்து சென்று வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்வர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.