சென்னையில் ஒரு கனமழைக்காலம்... வெள்ளத்தில் நீந்தும் வாகன ஓட்டிகள்
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
சென்னை: தமிழக தலைநகரான சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தென்மேற்குப் பருவமழை காலத்தில் அநேக இடங்களில் மழை பெய்யவில்லை. இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தினசரியும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. பகல்நேரங்களில் வெயில் வாட்டினாலும் மாலை நேரங்களில் மழையும் கொட்டித் தீர்க்கிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், ஏற்கெனவே உள்ள வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம், புதுவையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
கன மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், இன்றும் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வானிலை ஆய்வுமையம் கணித்தது போலவே சென்னையில் இன்று மாலையில் மழை கொட்டித்தீர்த்தது.
கொட்டிய கனமழை
மாலை நேரத்தில் கருமேகம் சூழ்ந்த நிலையில் திடீரென பெருமழை பெய்தது. மயிலாப்பூர், மந்தவெளி, பட்டினம்பாக்கம்,ராயப்பேட்டை கோயம்பேடு, வடபழனி, திருமங்கலம், எழும்பூர், அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
பெருகிய வெள்ளம்
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளிகளை விட்டு வீடு திரும்பிய மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
போக்குவரத்து பாதிப்பு
சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விடாது கொட்டித்தீர்க்கும் மழையால் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.
கனமழையால் சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. அண்ணா பல்கலைக் கழக வளாகமே மழையால் ரம்மியமாக காட்சி தருகிறது.