அம்மாவுக்கு ஆஞ்சியோ... கொட்டும் மழையில் விடிய விடிய தொண்டர்கள் பிரார்த்தனை
சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரைடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவில் அறிக்கை வெளியிட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
முதல்வர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என அப்போலோ மருத்துவமனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனைப்படி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் செய்தியைப் பார்த்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக அப்பலோ மருத்துவமனை முன்பாக கட்டுக்கடங்காமல் திரண்டனர். கதறி அழுதபடி பலரும் மருத்துவமனை நோக்கி ஓடிவந்தனர்.
அப்பலோவில் தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். காராஷ்டிராவில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரவோடு இரவாக சென்னை திரும்பி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் நலம் குறித்து கேட்டறிந்தார். வழக்கமாறி அறிக்கை வெளியிடும் ஆளுநர் மாளிகை எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை.
பதற்றம் அதிகரிப்பு
நேரம் செல்லச் செல்ல அப்பல்லோ மருத்துவமனை முன்பு பதற்றம் அதிகரித்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்திருக்க, நூற்றுக்கணக்கான போலீசாரும் உடனே வரவழைக்கப்பட்டனர்.
ஆளுநர் வருகை
நள்ளிரவு 12.02 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் 10 நிமிடங்களில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். இந்த நிமிடம் வரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நேரம் செல்லச் செல்ல தொண்டர்களின் பதற்றமும் அதிகரித்தது. எனினும் நம்பிக்கையுடன் அம்மா பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றும் தெரிவித்தனர்.
மழையிலும் விடாது பிரார்த்தனை
அதிகாலை 3.45 மணியளவில் சென்னையில் முக்கிய பகுதிகளில் திடீரென மழை கொட்டியது. அடாது மழையிலும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க விடாது பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மாரடைப்பு ஏற்பட்டதால் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டர்களின் நம்பிக்கை
மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் தொண்டர்களோ, அம்மா நல்லாயிருக்காங்க. அவங்களுக்கு ஒன்றும் ஆகாது. தமிழக மக்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. நலமுடன் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையோடும் உறுதியோடும் கூறி வருகின்றனர். தொண்டர்களின் நம்பிக்கை பலிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
சென்னையில் குவியும் தொண்டர்கள்
தமிழகம் முழுவதும் இருந்தும் அதிமுகவினர் இரவோடு இரவாக சென்னை நோக்கி புறப்பட்டு வருவதால் இன்று அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய முக்கிய நகரங்களிலும் பதற்றம் அதிகரித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.