தொடர் மழை... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு அருகே வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளது.
இதனால், நேற்று மீண்டும் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
எனவே, தொடர் மழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
மேலும், தனியார் கல்வி நிறுவனங்களும் இன்று செயல்படாது என அறிவிப்பு.