ஈரோட்டில் இரவு சூறாவளிக்காற்றுடன் கனமழை.. மரங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் பாதிப்பு!
ஈரோட்டில் நேற்று இரவு கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன.
ஈரோடு: ஈரோடு அருகே நேற்று இரவு கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால் கோபிச்செட்டிப் பாளையம் பகுதியில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வரலாறு காணாத வெயிலால் கடுமையான அனல் காற்றும் வீசி வருகிறது.
பல இடங்களில் நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் வாட்டிவதைத்து வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே தோட்டக்காட்டூரில் நேற்று இரவு கனமழை பெய்தது. அப்போது வீசிய சூறாவளிக்காற்றினால் 50 ஆண்டுகள் பழமையான வெள்ள வேலமரம் முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் பொலவக்காளி பாளையத்திலிருந்து வெள்ளங்கோயில் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மின்சார கம்பிகள், கேபிள் டிவி ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன்காரமாக 25க்கும் மேற்பட்ட கிராமத்தில் மின்சாரம் கேபிள் டிவி ஒளிபரப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.