இதுக்கு தான் சென்னை புறநகரில் வசிக்கக் கூடாதுங்கிறது?: ரணகளத்திலும் கிளுகிளுப்பு
சென்னை: கனமழையால் சென்னையின் மையப் பகுதிகளை விட புறநகர் பகுதிகள் தான் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி சென்னைவாசிகளின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
கனமழை
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
மேலும்
தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணன் தெரிவித்துள்ளார்.
மின்சாரம்
கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். உணவுப் பொருட்களை வாங்கக் கூட கடைக்கு செல்ல முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
புறநகர்
சென்னையின் மையப்பகுதிகளை விட புறநகர் பகுதிகள் தான் வெள்ளத்தால் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் நகரின் மையப்பகுதிகளில் வசிப்பவர்கள் இதற்கு தான் புறநகரில் வசிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.
ஐ.டி.
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் துவங்கப்பட்டன. இதையடுத்து அங்கு போதிய திட்டமின்றி அவசர அவசரமாக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டன. இப்படி அவசர கோலத்தில் வளர்ந்த புறநநகர் பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மிதக்கின்றன.
ஏரிகள்
புறநகர் பகுதிகளில் உள்ள பல ஏரிகள் மாயமாகிவிட்டன. காரணம் அவற்றை ஆக்கிரமித்து கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஏரி ஆக்கிரமிப்புகள் தான் தற்போது புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க காரணம் என்று மக்கள் கூறிவருகின்றனர்.