தமிழகத்தில் மழை நீடிக்கும், இந்த ஆண்டு சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது- ரமணன்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு - மாலத்தீவு அருகே நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட இந்த ஆண்டு கூடுலாக பெய்துள்ளதாகவும் ரமணன் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரண மாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள்மாவட்டங்களும், தென் மாவட்டங்களும் நீரில் மிதக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை 24 மணிநேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன்,
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரிக்கடலில் நிலை கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நகர்ந்து மாலத்தீவு கடல்பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 24 மணிநேரத்திற்கு மழை தொடர வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும், உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை தொடரும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது கனமழை பெய்யும். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட கூடுதலாக பெய்துள்ளது. இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 1ம்தேதி முதல் இன்றுவரை 47 செ.மீ அளவு மழை சராசரியாக பதிவாகியுள்ளது. மூன்றுமாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒரு மாதத்தில் பெய்துள்ளது என்றும் ரமணன் தெரிவித்தார்.