சென்னை உட்பட 8 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை!
சென்னை: கனமழை தொடர்வதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாகி மிதந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எங்கெங்கும் மழை வெள்ளக்காடுகளாக காட்சி அளிக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அடையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியான சென்னை புறநகர் முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி,கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.