சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளிக்காக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் அதிகரிப்பால் பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளிக்காக, சென்னையில் இருந்து வெளியூருக்கு சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருகிறது. இதன்படி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், கோயம்பேட்டில் இருந்து மதுரை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, ஆகிய தென்மாவட்ட ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்த பயணிகளுக்காக வண்டலூர் அருகில் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்ட தாற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பேருந்து, ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோர் கார்களில் குடும்பம் குடும்பமாக கிளம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் இன்று அதிகளவில் காணப்பட்டது. பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளாதல், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்ல 2 மணிநேரம் ஆவதால் பயணிகள் அவதி கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.