நம்பிக்கை வாக்கெடுப்பு.. கடும் அமளி… சட்டசபை 3 மணி வரை ஒத்தி வைப்பு
எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை 3 மணி வரை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: எதிர்க்கட்சியின் தொடர் அமளியை அடுத்து 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட சட்டசபை, மீண்டும் தொடர்ந்து அமளி நடைபெற்றதால் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை இன்று நிரூபிக்க சட்டசபை கூட்டப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் போது ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபை தொடங்கி 1 மணி நேரத்திற்கு மேலாகியும் தொடர் அமளி நடைபெற்றது. அங்குள்ள மைக், நாற்காலி உள்ளிட்டவை உடைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மதியம் 1 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
#WATCH DMK MLAs scuffle with TN Assembly speaker, protesting DMK MLA Ku Ka Selvam sat on speaker chair #floortest (Jaya TV) pic.twitter.com/CkMQY9FfQx
— ANI (@ANI_news) February 18, 2017
இதனைத் தொடர்ந்து மீண்டும் அவை கூடியது. மீண்டும் திமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபாலன் உத்தரவிட்டார். திமுக எம்எல்ஏக்கள் வெளியேற மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் அமளியை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் அவை மீண்டும் 3 வரை ஒத்தி வைத்துள்ளார்.