9952740740 என்ற எண்ணுக்குப் போன் செய்து 'ஹலோ போலீஸில்' புகார் தரலாம்.. நெல்லையில்!
நெல்லை: நெல்லை மாவட்ட பொதுமக்களின அவசர கால உதவிக்காக ஹலோ போலீஸ் என்ற புதிய திட்டத்தை எஸ்.பி. அதிரடியாக துவங்கி வைத்தார். இது முதல் நாளே நல்ல பலனை தருவதால் போலீசார் புத்துணர்ச்சியில் உள்ளனர்.
நெல்லையில் கடந்த ஓராண்டாக பழிக்கு பழி, நிலத் தகராறு, சாதி பிரச்சனை என வெவ்வேறு காரணங்களால் 100க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எஸ்.பி. அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் புதிய எஸ்.பி.யாக விக்ரமன் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விக்ரமன் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில்,
பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் அவசர கால உதவிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள வசதியாக ஹலோ போலீஸ் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் 9952740740 என்ற செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு தங்களுககு தெரிந்த புகார்கள் மற்றும் குற்ற செயல்கள் குறித்து தெரிவிக்கலாம். மேலும் இந்த நம்பருக்கு வாட்ஸ் ஆப், மெசேஜும் அனுப்பலாம்.
தகவல் அளிப்பவர்களுக்கு நாங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் நானும், எனக்கு கீழ் உள்ள 3 அதிகாரிகளும் தகவல்களை பெறறு உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இது போன்ற திட்டத்தை விழுப்புரத்தி்ல் முதன் முறையாக துவங்கி வைத்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
இந்த நம்பரில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் உள்பட யார் வேண்டுமானாலும் தகவல்களை அனுப்பி வைக்கலாம். மேலும் நெல்லை மாவட்டத்தில் ஜாதி மோதல்கள் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு விரைவில் அமைதி கூட்டம் நடத்தப்படும். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஜாதி போஸ்டர்கள், ஜாதி பாடல்களை போடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றார்.
ஹலோ போலீஸ் திட்டம் துவங்கி வைத்த முதல் நாளே கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் அதிரடியாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.