புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம பெண் வாயில் சாராயத்தை ஊற்றி பலாத்காரம் செய்த கயவர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக கடலுக்குப் போன சமயத்தில், இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஹேமலதா எப்படி பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றபட்ட ஹேமலதா தனது சகோதரிகள் மற்றும் பெற்றோருடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து அனைவரும் காலாப்பட்டு கடற்கரைக்குச் சென்று அங்கு கடலில் குதித்துள்ளனர்.
அப்போது ஹேமலதா மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளார். அப்போது அங்கு நண்டு பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலை முயற்சியில் ஹேமலதாவின் 2 சகோதரிகளும், தாயாரும் உயிரிழந்தனர். ஹேமலதா, அவரது தந்தை மற்றும் இரு சகோதரிகள் மட்டும் உயிர் பிழைத்தனர்.
உயிர் பிழைத்த ஹேமலதா தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் விஜயக்குமார், ராஜு ஆகிய இருவர் சிக்கினர். இவர்கள் தாங்கள் ஹேமலதாவை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒத்துக் கொண்டனர்.
விசாரணையின்போது, கடற்கரையில் மயங்கி கிடந்த ஹேமலதாவின் வாயில் சாராயத்தை ஊற்றி பலாத்காரம் செய்ததாக இவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஹேமலதாவிடம் இருந்து இவர்கள் திருடிய மோதிரத்தையும் போலீசார் கைப்பற்றினர். இருவரும் தற்போது புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.