சிகிச்சைக்கு சேர்ந்த நாள் முதல் ஜெ. உடல்நிலை தேறவேயில்லை.. எய்ம்ஸ் அறிக்கையில் அம்பலம்!
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நாள் முதல், பெரிய அளவில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு ஏற்பாட்டின்பேரில் எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தங்களின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவகுழு அளித்த அறிக்கை விவரம் இதுதான்: டாக்டர் கில்னானி தலைமையில் 3 பேர் கொண்ட எய்ம்ஸ் குழு அக்டோப்ர் 5ம் தேதி இரவு 8.15 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றது.
அப்போலோ மருத்துவமனையில் அப்போது ஜெயலலிதாவுக்கு ஐசியூ பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா கடந்த 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டு வந்துள்ளார். மேலும், ஆஸ்துமா போன்ற நோய்களும் இருந்தது.
மூச்சு சிரமம்
மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதா மூச்சுவிட சிரமப்பட்டார். அன்று சுயநினைவும் இல்லை. ரத்த கொதிப்பு இருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு 7 நாட்களாக காய்ச்சல் மற்றும் சிறுநீராக தொற்று நோயால் அவதிப்பட்டு இருந்தார். தோல் நோய்க்காக ஸ்டிராய்டு மாத்திரைகளும் எடுத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதாவது 400 என்ற அளவில் இருந்தது. ஜெயலலிதாவுக்கு சளி அதிகமாக இருந்ததால் அதற்கான சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 28ம் தேதி ஜெயலலிதாவுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. அவருக்கு கொடுத்த மருந்து, மாத்திரைகள் பயன் அளிக்கவில்லை. இதனால், செயற்கை முறையில் மயக்க நிலையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
எக்கோ டெஸ்ட்
ஏற்கனவே, அவருக்கு எக்கோ டெஸ்ட் செய்யப்பட்டது. அக்டோபர் மாதம், பல்வேறு எக்ஸ்ரே உள்பட பல்வேறு டெஸ்டுகள் எடுக்கப்பட்டது. இதை எங்களது குழு ஆய்வு செய்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் மயக்க மருந்து அளவை குறைத்து டிராக்கோஸ்டோமி சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கினோம். இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர் நிதிஷ் நாயக்கிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் ஜெயலலிதாவுக்கு டிராக்கோஸ்டோமி சிகிச்சை அளிப்பது ஆபத்தானது. அதற்கு பதிலாக தீவிரமாக கண்காணித்து மாற்று சிகிச்சைகளை அளிக்கலாம் என அறிவுரை கூறினார்.
ஆலோசனை
இதையடுத்து, அக்டோபர் 6ம் தேதி ஜெயலலிதாவை பரிசோதனை செய்தோம். ஆனால், உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலாளர் மற்றும் அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியிடம் ஆலோசனை செய்தோம். இதைத்தொடர்ந்து அக்டோபர் 7ம் தேதி அதிகாலை டிரக்கோஸ்டோமி சிகிச்சை பணி தொடங்கப்பட்டது. காலை 11 மணிக்கு உடல்நிலை சீராக இருந்தது. மருந்து, மாத்திரைகள் அவருக்கு உடலுக்கு வேலை செய்தது. உடல்நலம் குன்றியதால் அவருக்கு ஒரு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. ஜெயலலிதாவுக்கு முழுக்க முழுக்க செயற்கை சுவாசம் மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து அவர் கவலைகிடமாக தான் இருந்தார். மேலும், பிசியோதிரபி அளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினோம். நோய் தொற்று கட்டுக்குள் கொண்ட வரப்பட்டது.
நுரையீரலிலும் சிக்கல்
ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் குழு அக்டோபர் 9ம் தேதி மாலை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் நுரையீரல் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஜெயலலிதா நுரையீரலில் திரவம் தேங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து திரவத்தை வெளியேற்றினோம். சிறுநீராகத்தை ஆய்வு செய்தபோது, பாக்டிரியா தொற்று இருப்பது தெரியவந்தது. இதே தொற்று தான் நுரையீரல் திரவத்தில் இருந்தது தெரியவந்தது. இதனால், தொடர்ந்து செயற்கை சுவாசத்துடன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிடி ஸ்கேன்
அக்டோபர் 10ம் தேதி அவரது உடல்நிலை சீராக இருந்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்தை 7 நாட்களுக்கு தர முடிவு செய்தோம். மேலும், அவருக்கு மயக்க மருந்து படிப்படியாக குறைப்பது என்றும், செயற்கை கருவி மூலம் சுவாசிப்பதை விவாதித்தோம். இதுதொடர்பாக தமிழக சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். எனினும் அவருக்கு நீண்ட நாட்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருந்தது. எய்மஸ் டாக்டர் கில்னானி தலைமையில் மருத்துவ குழு 13ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை வந்தது. அப்போது செயற்கை உபகரணம் உதவிகளுடன் ஜெயலலிதா இருந்தார். அவருடைய நுரையீரலில் தேங்கி இருந்த திரவத்தை முழுமையாக வெளியேற்றினோம். இதைத்தொடர்ந்து அவருடைய மார்பு, வயிறு பகுதி சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
பிசியோதெரபி
அக்டோபர் 15ம் தேதி அவருடைய ரத்தத்தில் இருந்த ஆக்சிஜன் அளவு மேம்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளருடன் அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி அலுவலகத்தில் வைத்து விளக்கினோம். பேராசிரியர் கில்னானி தலைமையில் 4 பேர் கொண்ட குழு டிசம்பர் 3ம் தேதி அதிகாலை சென்னைக்கு வந்தது. காலை 9 மணிக்கு அப்போலோ சென்றனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அப்போலோ மருத்துவர்களும் உடல்நிலை குறித்து விவாதித்தோம். அப்போது ஜெயலலிதா தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என சொன்னோம்.
ஹார்ட்அட்டாக்
இரவு நேரத்தில் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். பகலில் சுயநினைவுடன் இருந்தார். 20 நிமிடங்கள் உட்கார முடிந்தது. ஆனால், எழுந்து நிற்க முடியவில்லை. நரம்பியல் பிரச்னை காரணமாக அவரால் நிற்க முடியாது. முதல்வர் முழுமையாக உடல்நிலை தேறி வர பல மாதங்களாக ஆகும் என தெரிவித்தோம். ஹார்ட்அட்டாக் என்ற தகவலை தொடர்ந்து, கில்னானி தலைமையில் 4 பேர் கொண்ட குழு டிசம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு அப்போலோ வந்தது. அப்போது, ஜெயலலிதாவுக்கு ஐசியுவில் சிகிச்சை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். பிரதாப் ரெட்டி மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்கள் இருந்தனர். அப்போது நரம்பியல் நிபுணர் ஜெயலலிதாவின் அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்து விட்டது. அவருக்கு எந்த சிகிச்சை அளித்தாலும் பயன் அளிக்காது. அவருடைய உடல் வெப்பநிலை சீராக வேண்டும். அதன்பிறகே தொடர் சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார்.
உடல் முழுக்க செயலிழந்தது
இரவு 10 மணிக்கு அவருடைய உடல் வெப்பநிலை சீரானது. எக்மோ டெஸ்ட் பயன்படுத்தியும் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து விட்டது. அவருடைய உடல் முழுவதும் செயலிழந்து விட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டது. அப்போலோ ரெட்டி தலைமையில் மீண்டும் ஆலோசிக்கப்பட்டு சிகிச்சை பயன் இன்மை குறித்து உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் கூறி முடிவு எடுக்க சொன்னோம். 6ம் தேதி காலை எங்கள் குழு டெல்லி திரும்பியது. இவ்வாறு எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.