இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு கடந்து வந்த பாதை!
தொலைதொடர்புத் துறையின் மிகப்பெரிய ஊழல் வழக்காக வர்ணிக்கப்படும் 2ஜி வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
சென்னை: 2ஜி தொலைதொடர்பு ஊழல் வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட்டு மாதம் 25ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்:
2007 மே- ஆ.ராசா மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக பதவியேற்றார்.
2007 ஆகஸ்ட்- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பணிகள் ஆரம்பித்தன.
செப்டம்பர் 25: தொலைதொடர்பு துறை அமைச்சகம் 2007 அக்டோபர் 1ம் தேதிக்குள் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
2007 அக்டோபர் 1: 46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
2007 நவம்பர் 2: விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட சில நெறிமுறைகளை சுட்டிக்காட்டி ராசாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் அனுப்புகிறார். அதற்கு ராசா அனுப்பிய பதில் கடிதத்தில் பல பரிந்துரைகளை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
2007 நவம்பர் 22: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையை விமர்சனம் செய்து, நிதி அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தது.
2008 ஜனவரி 10: முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், 2007 செப்டம்பர் 25ம் தேதி வந்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று தொலைதொடர்பு துறை அமைச்சகம் கறாராக அறிவித்தது. மேலும் அன்றைய தினம் மதியம் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் வந்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் கூறியது.
2008 செப்டம்பர் - அப்டோபர்: ஸ்வான் டெலிகாம், யுனிடெக் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள், தங்களின் பங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்தன. ஒதுக்கீடு செய்த 9 உரிமங்களில் மட்டுமே சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் தொலைதொடர்புத் துறைக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
2009, நவம்பர் 15: மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷனர், ராஜாவுக்கு நோட்டீஸ்அனுப்பியது. மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.
2009 மே 4: மத்திய கண்காணிப்பு கமிஷனிடம் என்ஜிஓ ஒன்று, அலைக்கற்றை முறைகேடு பற்றி புகார் அலித்தது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு, கண்காணிப்பு கமிஷன் பரிந்துரைத்தது.
2009 அக்டோபர் 21: சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அந்த எப்ஐஆரில், குற்றவாளிகளாக, யார் என்று தெரியாத தொலைதொடர்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் யாரென்று தெரியாத தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் என்று குறிப்பிடப்பட்டது.
2009 அக்டோபர் 22: தொலைதொடர்பு துறை அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
2009 நவம்பர் 20: இடைத்தரகர் நீரா ராடியாவும், ராசாவும் தொடர்பில் இருந்தது அம்பலப்படுத்தப்பட்டது.
2010 மார்ச் 31- மத்திய ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில், 2ஜி ஒதுக்கீடு முறையற்ற வகையிலும், வெளிப்படையில்லாமலும் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2010 நவம்பர் 10- ஆடிட்டர் ஜெனரல் மத்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் அரசின் கருவூலத்துக்கு வர வேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி இழக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவலை வெளியிட்டது.
2010 நவம்பர் 14-5: தொலைதொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ராசா ராஜினாமா செய்தார். கபில் சிபலுக்கு அந்த பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது.
2011 பிப்ரவரி 10: பல்வாவுடன் சேர்த்து ராசாவும் சிபிஐ விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
2011 பிப்ரவரி 17: டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலின்கீழ் ராசா அடைக்கப்பட்டார்.
2011 பிப்ரவரி 24: திமுக நடத்தும் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் சென்று சேர பல்வா உதவியதாக சிபிஐ தரப்பில் டெல்லி கோர்ட்டில் வாதம் வைக்கப்பட்டது.
2011 ஏப்ரல் 2: 2ஜி வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ராஜா, சாண்டோலியா மற்றும் பெகுரா ஆகியோரின் பெயர்களும், ரிலையன்ஸ் நிறுவன எம்.டி, கவுதம் தோஷி, மூத்த தலைவர் ஹரி நாயர், குரூப் தலைவர் சுரேந்திர பிபாரா, ஸ்வான் டெலிகாம் புரமோட்டர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா மற்றும் யுனிடெக் நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்கக்ப்பட்டனர். ரிலையன்ஸ் நிறுவனம், ஸ்வான் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் ஆகிய நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன.
2011 ஏப்ரல் 25: சிபிஐ தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில், கனிமொழி மற்றும் நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
2011 மே 16: ராசாவின் உதவியாளர் சாதிக் பாஷா மர்மமான முறையில் சென்னையில் இருந்த அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
2011 மே 21: கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
2011 டிசம்பர் 12: சிபிஐ 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் மேலும் பல தனியார் நிறுவன நிர்வாகிகள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
2012 பிப்ரவரி 2: ராசா காலத்தில் வழங்கப்பட்ட 122 லைசென்சுகளை சுப்ரீம்கோர்ட் அதிரடியாக ரத்து செய்தது.
2012 ஆகஸ்ட் 24: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தையும் இவ்வழக்கில் சேர்க்க கோரிய சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரின் மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது.
2013 அக்டோபர் 29: அரசு அமைத்த பி சி சக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு 2ஜி ஊழல் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அளித்தது.
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு எழுத 1 மாத காலமாகும் என்பதால் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.