நீலகிரியில் துவங்கியது “நீர்ப்பனி சீசன்” - கடும் குளிரில் வாடி வதங்கும் மக்கள்!
நீலகிரி: நீலகிரியில் நீர்ப்பனி என்னும் கொட்டும் பனி சீசன் ஆரம்பித்துள்ளதால் நடுங்கும் குளிரில் சிக்கி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான நீலகிரியில் கடந்த ஒருவாரமாக வெயில் கொளுத்தியது. இதனால் ஓணம் பண்டிகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவிக்க முடியாமல் சிரமப்பட்டனர். நீலகிரி மக்களும் வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நீர்பனி கொட்டத் தொடங்கியது. இதனால் கடுங்குளிர் நிலவியது. நடுங்கவைக்கும் குளிரால் இன்று காலை பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்ல முடியாமல் ஊழியர்களும் அவதிப்பட்டனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா பகுதியில் உள்ள புல்வெளிகளில் பனித்துளி படர்ந்திருந்தது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன் மற்றும் கேமிராக்களில் படமாக்கி கொண்டனர்.
தொடர்ந்து 3 நாட்கள் நீர்பனி பெய்தால் அதன் பின்னர் பனி சீசன் தொடங்கிவிடும். பனி பெய்யத் தொடங்கினால் தற்போது சாகுபடி செய்துள்ள காய்கறிகள், மற்றும் தேயிலை செடிகள் கருகி விடும். முன்னதாகவே நீர்பனி சீசன் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.