டெண்டருக்கு ரூ.12 கோடி லஞ்சம் - அமைச்சர் அன்பழகன் ஹைகோர்ட் நோட்டீஸ்!
கட்டிட ஒப்பந்தம் அளிக்க ரூ.12 கோடி லஞ்சம் கேட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை : பொதுப்பணித்துறையின் கட்டிட ஒப்பந்தத்தை அளிக்க ரூ.12 கோடி லஞ்சம் கேட்டதாக ஒப்பந்ததாரர் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்குமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கால் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழக பொதுப்பணித் துறையில், முதல்நிலை ஒப்பந்ததாரராக உள்ள தான், பல ஒப்பந்த பணிகளை செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், தேனி, மதுரை, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிதாக பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டிட பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்பை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கடந்த மே மாதம் வெளியிட்டார். இதன்படி கடந்த ஜூன் 9ஆம்தேதி ஒப்பந்த பணிக்கான டெண்டரை தாக்கல் செய்தேன்.
இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதி தொடர்பான ஆவணங்கள் அன்று திறக்கப்பட்டது. இதில் என்னுடைய நிறுவனம் தகுதி பெற்றிருந்தது. இதையடுத்து, பொதுப் பணித்துறை தலைமை என்ஜினீயர், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனை நேரில் சந்தித்து பேசும்படி கூறினார்.
நானும் அமைச்சரை நேரில் சந்தித்தேன். அப்போது, இந்த ஒப்பந்த பணிகளை ஈரோட்டை சேர்ந்த நந்தினி கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்போவதாகவும், அதனால் டெண்டர் ஆவணங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் என்னிடம் கூறினார்.
ரூ. 12 கோடி லஞ்சம் கேட்ட அமைச்சர்
மேலும் ஈரோட்டை சேர்ந்த நிறுவனம், இந்த கட்டுமான பணிக்காக மொத்த ஒப்பந்த தொகையில் 16 சதவீதத்தை தனக்கு தர சம்மதித்துள்ளதாகவும், 20 சதவீத தொகையை லஞ்சமாக கொடுத்தால், இந்த பணிகளை எனக்கு தருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் இந்த லஞ்சத் தொகையை தரவில்லை என்றால், என்னுடைய டெண்டர் விண்ணப்பத்தை நிராகரித்து விடுவதாகவும் அமைச்சர் கூறினார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாததால், இதற்கு நான் சம்மதிக்கவில்லை.
ஆளுநரிடம் முறையீடு
மேலும், இந்த ஒப்பந்த பணிக்கான தொகையை நான் மிகவும் குறைவாக குறிப்பிட்டுள்ளேன். அதனால், இந்த பணி எனக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், லஞ்சப் பணம் கொடுக்காததால், இந்த டெண்டர் விண்ணப்பத்தை திறக்காமலும், ஒப்பந்த பணியை இறுதி செய்யாமலும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். கடந்த 22ஆம்தேதி தமிழக பொறுப்பு ஆளுநரிடமும் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளேன்.
நடவடிக்கையில்லை
டெண்டர் விண்ணப்பத்தை திறந்து, தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு பணியை ஒதுக்க பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயருக்கு உத்தரவிட வேண்டும். பல கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மீது குற்றவழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டெண்டர் நிறுத்தம்
எனவே, எனக்கு தகவல் தெரிவிக்காமல், இந்த டெண்டர் விண்ணப்பத்தை திறக்கக்கூடாது என்று பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வெங்கன் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மற்றும் வழக்கறிஞர் இளங்கோவன் ஆகியோர், ‘மொத்தம் ரூ.79 கோடிக்கான ஒப்பந்த பணிக்கு 16 சதவீதம் லஞ்சமாக அமைச்சர் கேட்டுள்ளார். அதாவது சுமார் ரூ.12 கோடியை லஞ்சம் கேட்டுள்ளார். இதை தர மறுத்ததால், மனுதாரருக்கு இந்த ஒப்பந்த பணி கிடைக்கக்கூடாது என்ற ரீதியில் அமைச்சரும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர்' என்று வாதிட்டனர்.
அமைச்சருக்கு நோட்டீஸ்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல் மூர்த்தி, ‘அமைச்சர் லஞ்சம் கேட்டால், தமிழக அரசிடம் தான் புகார் செய்யவேண்டும். ஆனால், மனுதாரர் கவர்னரிடம் சென்று புகார் செய்துள்ளார். இது தேவையில்லாதது' என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரைசாமி, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அமைச்சர் அன்பழகன், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.