தினகரன், நடிகர் செந்திலை கைது செய்ய ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை!
மதுரை: டிடிவி தினகரன் மற்றும், நடிகர் செந்தில் ஆகியோரை கைது செய்ய அக். 4வரை இடைக்கால தடை விதித்து மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் திருச்சி எம்.பி ப.குமார் எம்.பி அளித்த புகாரின் பேரில் திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் ஹைகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், தினகரன், செந்தில் ஆகியோர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும், ஆபாச பேச்சு பேசிதாகவும் ப.குமார் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து தங்களை கைது செய்ய தடை விதிக்க கோரி செந்தில் ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுந்தர், அக்.4வரை தினகரன் மற்றும் செந்தில் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தினகரன் தரப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து அவர் தப்பியுள்ளார்.