கோவில்களில் விலங்குகள் பலி... குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : விலங்குகள் பலியிடப்படுவதை வரைமுறைப்படுத்த ஒரு வாரத்தில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவிழாக்களில் விலங்குள் பலியிடப்படுவதை வரைமுறைபடுத்த கோரி இந்திய விலங்குகளுக்கான மக்கள் அமைப்பைச் சேர்ந்த அருண் பிரசன்னா, மற்றும் வனவிலங்கு புகைப்படக்காரர் சேஷன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், சிவஞானம் ஆகியோர் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய முறையில் பதிலளிக்காமல் நீதிமன்றத்தின் பொறுமையை தமிழக அரசு தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள கூடாது என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒரு வாரத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.