வெளிநாடு செல்ல அனுமதி தேவை – தயாநிதி மனுவிற்கு பதிலளிக்க போலீஸுக்கு உத்தரவு
தயாநிதி தாக்கல் செய்த மனுவில், "மேலூர் கிரானைட் முறைகேடு குறித்து 2012 ல் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எனக்கு 2012 இல் ஹைகோர்ட் முன்ஜாமின் வழங்கியது. ஹைகோர்ட் நிபந்தனைப்படி மேலூர் கோர்ட்டில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தேன்.
நான் சினிமா தயாரிப்பு தொழிலில் உள்ளேன். அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால் பாஸ்போர்ட் அவசியம். மேலூர் கோர்ட் வசம் உள்ள பாஸ்போர்ட்டை, திரும்ப வழங்க கோரி ஹைகோர்ட்டில் மனு செய்தேன். அதை விசிர்தத தனி நீதிபதி, "சான்றொப்பம் பெறப்பட்ட பாஸ்போர்ட் நகலை மேலூர் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். 2 லட்சம் ரூபாய்க்கு பிணைய பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். கோர்ட் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கலாம், மனுதாரர் வெளிநாடு செல்வதற்கு முன், பின், 10 நாட்களுக்குள் பயண பட்டியல் விபரத்தை மேலூர் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதில் சிரமம் இருந்ததால், நிபந்தனையை தளர்த்த ஹைகோர்ட்டில் மனு செய்தேன். இதை விசாரித்த தனிநீதிபதி, "வெளிநாடு செல்வதற்கு முன் 3 நாட்கள், வந்தபின் தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.
நான் சினிமா தயாரிப்பு தொழிலில் உள்ளதால் வெளிநாடு செல்வதற்கு முன் முன்னேற்பாடு செய்ய வேண்டியுள்ளது. தற்போது கிரானைட் வழக்கு விசாரணை முடிந்து விட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். கோர்ட் நிபந்தனையை மீறவில்லை. சாட்சிகளை கலைக்கவில்லை. என் தந்தை அழகிரி முன்னாள் மத்திய அமைச்சர்.
வெளிநாடு செல்வதற்கு முன் 3 நாட்கள், வந்தபின் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் தீபக் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து கீழவளவு போலீசார் நவம்பர் 28 ம் தேதி பதில் மனு செய்ய உத்தரவிட்டார்.