கீழடி தொல்லியல் அதிகாரி இடமாற்றம் ஏன்.. அருங்காட்சியகம் வைக்காதது ஏன்.. நீதிமன்றம் சரமாரிக் கேள்வி
கீழடியில் தொல்லியல் அதிகாரி அமர்நாத்தை இடமாற்றம் செய்தது ஏன் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: அகழாய்வு பொருட்களை சிவகங்கையில் காட்சிப்படுத்தாதது ஏன் என்றும், அதிகாரி அமர்நாத்தை இடமாற்றம் செய்தது ஏன் என்றும் இந்திய தொல்லியல் துறையிடம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொல்லியல்துறை அகழாய்வு பெங்களூருப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்புக் குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, சங்க கால நகர நாகரீகத்தின் கட்டட அடித்தளம், கால்வாய் அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சுட்ட செங்கற்களால் ஆன வீட்டுச் சுவர்கள், உறைக் கிணறுகள், திறந்த, மூடிய, உருளை வடிவம் என கால்வாய்கள் கண்டறியப்பட்டன. சுமார் 3800 அரிய பொருட்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டன.
இந்நிலையில், அங்கு தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரி அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கனிமொழி மதி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வந்தது. அப்போது, கீழடி அகழாய்வு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது ஏன் என்றும், சிவகங்கையில் அரிய பொருட்களை காட்சிப்படுத்தாதது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டது.