சஸ்பெண்டான ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் நுழைய தடை: கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு
சென்னை: சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், கோட்டை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்தது போல போட்டி சட்டசபை போல எதுவும் நடந்து விடாதபடி தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் தலைமை செயலகம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 79 பேர், ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் வளாகத்தில், தர்ணா போராட்டம் மற்றும் போட்டி சட்டசபைக் கூட்டம் நடத்தி, திமுகவினர் பரபரப்பை ஏற்பத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 60 பேர் மீது சென்னை கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு என்றும் கூறப்படுகிறது.
எந்த நேரமும் கைது
இதனை உறுதி செய்யும் விதமாக, தாங்கள் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கட்சியின் மூத்த தலைவர்களான டி.கே.எஸ்.இளங்கோவன், அ.ராசா, பொன்முடி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
உச்சக்கட்ட பாதுகாப்பு
இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. எனவே, திமுகவினர் மீண்டும் போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு தலைமை செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திடீர் போரட்டம்
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று தாக்கல் செய்கிறார். எனவே, இந்த துறைகளின் மீதான மானியக்கோரிக்கையின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் மீண்டும் கோட்டைக்குள் வரலாம். அப்போது போட்டி சட்டசபை நடத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது போல, வேறு ஏதாவது திட்டங்கள் அவர்கள் வைத்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.
தடுப்பு வேலிகள்
திமுக உறுப்பினர்கள் மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் காவல் துறை உள்ளிட்ட துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மற்றும் அறிவிப்பு முக்கியத்துவம் பெறாமல் போகலாம் என்பதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கோட்டை வளாகத்திற்குள் நுழையாமல் இருக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோட்டை நுழைவு வாயிலில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு
சென்னை பெருநகர கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று தலைமை செயலகத்துக்கு வருபவர்களை, கோட்டை வாயிலில் இருக்கும் போலீசார் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே அனுமதிக்கின்றனர்.
காருக்கு கூட தடை
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் போலீசாருக்கு தரப்பட்டுள்ளது. அவர்கள் கோட்டைக்கு வரும் பட்சத்தில் உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடையாள அட்டை
இன்று போலீஸ் துறை மீதான மானியக் கோரிக்கை உள்ளிட்ட சட்டசபை நிகழ்வுகளை சேகரிக்க 2 செய்தியாளர் மற்றும் ஒரு ஒளிபரப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று செய்தி துறை தெரிவித்துள்ளது. அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பேட்டி கூடாது
நான்காம் கேட் அருகே உறுப்பினர்களிடம் பேட்டி எடுக்க அனுமதி கிடையாது என்றும், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் கட்சிகள் நாமக்கல் மாளிகை அருகே மட்டுமே பேட்டி கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டும் என்றும் செய்தித்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.