மனித சங்கிலி போன்ற அமைதி வழி போராட்டத்தை எப்படி தடுக்க முடியும்... ஹைகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி!
பொதுமக்கள் அமைதியான வழியில் போராடுவதை எப்படி தடுக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : திமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கருத்து கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமைதியான போராட்டத்தை எப்படி தடுக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாளை தமிழகத்தில் திமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று அறிவித்து போராட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று சத்தியமூர்த்தி என்பவர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு விசாரித்த போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திமுகவின் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஜூலை 25ம் தேதியே அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மனுவை தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி முக்கியமான இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவது அனைவருக்குமான உரிமை. பொதுமக்களின் அன்றாடப் பணிகளைத் தொடர முடியாமல் இடையூறு ஏற்படுத்தினால் மட்டுமே காவல்துறை தலையிட முடியும்.
கருப்பு பட்டை அணிந்து சாலையோரத்தில் மனித சங்கிலி நடத்தும் போராட்டத்தில் எப்படி நீதிமன்றம் தலையிட்டு தடை விதிக்க முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தாலும், காவல்துறை அனுமதியில்லாததால் திமுகவின் மனித சங்கிலி போராட்டம் அறிவித்தபடி நாளை நடக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.