நினைவிடத்தில் குரான்-பைபிள் வைப்பதா: இந்து மக்கள் கட்சி கலாம் அண்ணன் மகன் சலீம் மீது போலீசில் புகார்
அப்துல் கலாம் நினைவிடத்தில் குரான் மற்றும் பைபிள் ஆகிய நூல்கள் வைக்கப்பட்டதை அடுத்து இந்து மக்கள் கட்சி கலாமின் அண்ணன் மகன் சலீம் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடத்தில் குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டதை எதிர்த்து, கலாமின் அண்ணன் மகன் சலீம் மீது இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி திறந்து வைத்தார்.
அங்கு அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை பக்கத்தில் இருப்பது போன்றும் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள் மு.க. ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவை வைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர், அப்துல் கலாமின் அண்ணன் மகன் சலீம் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் மீண்டும் பரபரப்பு உருவானது.