இந்து முன்னணி பிரமுகர் அறிவாளால் வெட்டிப் படுகொலை… கோவையில் பதற்றம்
கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பதற்றம் நிலவுகிறது.
இந்து முன்னணியின் கோவை மாநகர மக்கள் செய்தித் தொடர்பாளராக இருந்தார் சசிகுமார். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் சுப்பிரமணிபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. சசிகுமாரை தடுத்து நிறுத்தி மர்ம கும்பல் அறிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த சசிகுமாரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த இந்து முன்னணியினர் தனியார் மருத்துவமனை வளாகத்தில் திரண்டது. இதனால் மருத்துவமனை அருகில் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த சசிகுமாரின் உடல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சசிகுமார் கொலையை கண்டித்து இன்று மாநில அளவிலான முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கோவை மாநகரில் சற்று பதற்றம் நிலவி வருகிறது.