பகவத் கீதை விவகாரம்... அப்துல் கலாம் பேரன் சலீம் மீது இந்து முன்னணியினர் போலீசில் புகார்: வீடியோ
பைபிள் மற்றும் குரான் வைத்ததற்காக அப்துல் கலாம் பேரன் ஷேக் சலீம் மீது இந்து முன்னணியினர் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம்: மணி மண்டபத்தில் கலாம் சிலையருகே பைபிள் மற்றும் குரான் நூல்களை வைத்ததற்காக அவரது பேரன் ஷேக் சலீம் மீது இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27ஆம் தேதி, மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு கலாம் வீணை வாசிப்பது போல சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அருகே பகவத் கீதை புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது என மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம், கலாமின் சிலை அருகே புனித நூல்களான பைபிள் மற்றும் குரானை வைத்து, கலாம் அனைவருக்கும் பொதுவானவர் எனக் கூறினார். இதனைக் கண்ட இந்து முன்னணியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஷேக் சலீம் மீது தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.