சேரிலிருந்து தடுமாறி விழுந்தார் ஆர்.எம். வீரப்பன்.. இடுப்பு எலும்பு முறிவு.. மருத்துவமனையில் அனுமதி
சென்னை: எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், கடந்த மாதம் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் குளியல் அறைக்கு செல்வதற்காக, தான் அமர்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்த போது, தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு இடுப்பில் பலத்த அடிபட்டது.
வலியால் துடித்த அவரை, உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மயில்வாகனன் ஆர்.எம்.வீரப்பனுக்கு இடுப்பில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்தார். தொடர்ந்து அவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்.எம்.வீரப்பனை, அவருடைய குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின் இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.