மாணவர்களுக்கு பைபிள் கொடுத்த நிறுவனம்.. பறித்து சாலையில் போட்டு போராட்டம் நடத்திய இந்து முன்னணி!
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முகாம் நடத்தி பைபிள்களை கொடுத்தனர். இதையறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இந்து முன்னணியினர் அந்த பைபிள்களைப் பறித்து கலெக்டர் அலுவலகத்திற்குக் கொண்டு போய் சாலையில் போட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதிய ஏற்பாடு, பைபிள்களை வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மாணவ, மாணவியர்களுக்கு சமய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளது.
இதை அறிந்த பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த இந்து முன்னணியினர் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மாணவ, மாணவியர்களிடம் கொடுக்கப்பட்ட பைபிள்களை வாங்கிவந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து போட்டு இன்று திடீர் போராட்டம் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர். அதில், பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதலோடு தான் இது நடந்துள்ளது. எனவே கல்வி அதிகாரிகள் பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.