தமிழகம் குஜராத்தாக மாறும்.. இந்து முன்னணி தலைவர் மிரட்டலால் கோவையில் தொடரும் பதட்டம்
கோவை: இந்து அமைப்பினர் மீதான தாக்குதலை போலீஸார் தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகம் குஜராத்தாக மாறுவதைத் தடுக்க முடியாது என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பதால் வன்முறையால் பாதிக்கப்பட்ட கோவையில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்ட இந்துமுன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை கொன்றது யார் என்று தெரியவில்லை. ஜாதி ஆணவக் கொலைாகவும் இது கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தக் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் கோவையில் வெறியாட்டம் போட்டு விட்டனர். வன்முறையில் ஈடுபட்டு போலீஸ் ஜீப், வாகனங்களைத் தீவைத்து எரித்தும், கடைகளை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுபட்டதால் கோவை நேற்று ஸ்தம்பித்தது.
இந்த நிலையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறுபான்மையினருக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சிலிருந்து:
அடுத்தடுத்து தாக்குதல்
தமிழகத்தில் இந்து அமைப்பினர்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். குறுகிய காலத்திற்குள் 3 இந்து அமைப்பினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உளவுத்துறை என்ன செய்கிறது
தமிழகத்தில் உளவுத்துறை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. அரசு சரியில்லை, எனவே உளவுத்துறையும் சரியில்லை. உளவுத்துறை சரியாகப் பணியாற்றினால் இதுபோன்ற கொலைகளைத் தடுத்திருக்க முடியும்.
தமிழகம் குஜராத்தாக மாறும்
இதுபோன்ற தாக்குதல்கள், கொலைகள் நடைபெறாமல் காவல்துறை எதிர்காலத்தில் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் குஜராத்தாக மாறுவதை தடுக்க முடியாது. அது நிச்சயம் நடக்கும்.
சிறுபான்மையினர் அச்சம்
ஏற்கனவே கோவை ஒரு பெரும் அசம்பாவிதத்தை கடந்த காலத்தில் சந்தித்து மீண்டது. இந்த நிலையில் குஜராத்தாக மாறும் என்று இந்து முன்னணி தலைவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருப்பது கோவையில் வசிக்கும் சிறுபான்மையினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.