கனமழை: கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெள்ளத்தில் தத்தளிக்கும் ராமேஸ்வரம்
கடலூர்: கன மழை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவு, மண்டபத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், குடிசை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பாம்பன் பாலத்தில் சிக்னல் கிடைக்காததால், ரயில்கள் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நேற்று முதல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. வியாழக்கிழமையன்று நள்ளிரவில் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது.
சூழ்ந்த வெள்ளநீர்
ராமேஸ்வரம், பாம்பனில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. தொடர் மழையால் மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, வீடுகளை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
மீனவர்கள் விடுமுறை
சூறாவளி காற்றால் அச்சமடைந்த ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதி நாட்டுப்படகு, பாம்பன் தெற்கு விசைப்படகு மீனவர்கள் பலர் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்றும் இதே நிலை நீடிப்பதால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
ரயில்கள் தாமதம்
வெள்ளிக்கிழமையன்று அதிகாலை பாம்பனில் 76 கி.மீ, வேகத்தில் வீசிய சூறாவளியால், தூக்கு பாலத்தில் ரயில் செல்ல தானியங்கி மிஷின் அனிமோ மீட்டரில் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 5:40 மணிக்கு மதுரை சென்ற பாசஞ்சர் ரயில் அக்காள்மடத்திலும், சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து புறப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் மற்றும் 2 பாசஞ்சர் ரயில்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்டன. இதனால் வட இந்திய பக்தர்கள், உள்ளூர் பயணிகள் பாதிக்கப்பட்டு, பஸ்சில் ராமேஸ்வரம் மற்றும் மதுரைக்கு சென்றனர்.
கடலூரில் விடுமுறை
இன்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் பாண்டூர், அரளி, காட்டுநெமிலி, செங்குறிச்சியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடல் சீற்றம்
மேலும் வேதாரண்யத்தில் 2வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் கோடியக்கரை, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நகரும் காற்றழுத்தம்
இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. அது, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நீடிக்கும்
இதனால் தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் கடலில் சீற்றம் காணப்படும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.