லைசென்சில் ஒட்டப்படும் அரசு முத்திரை நிறுத்தம் - வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்டத்தில் ஓட்டுனர் உரிமத்தில் ஒட்டப்படும் அரசு முத்திரை ஸ்டிக்கர் அரசு மூலம் வழங்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாவட்ட தலை நகரங்களில் வட்டார போக்குவரத்து அலுலவகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தனியார், அரசு பஸ்கள்,லாரிகள், வேன்கள், பள்ளி,கல்லூரி வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி பெறப்படுகிறது. இந்த அலுவலகங்களில் வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமமும் வழங்கப்படுகிறது.
இதில் ஓட்டுனரின் பெயர், முகவரி போன்ற விபரங்கள் இருக்கும். இதன் ஒரு பகுதியில் ஓட்டுனரின் புகைப்படத்தின் கீழ் தமிழக அரசு முத்திரையுடன் கூடிய ஹலோகிராம் ஸ்டிக்கர் இருக்கும். இந்த ஸ்டிக்கர் தமிழக அரசு மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த கடந்த ஒரு மாத காலமாக தமிழக அரசால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. புதிதாக விண்ணப்பம் செய்துள்ள வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது போல் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும் வேண்டிய ஸ்டிக்கர் வராததால் அவர்களும் மாதக்கணக்கில் இதற்காக காத்திருக்கின்றனர். இதனால் தமிழக அரசு கால தாமதம் செய்யாமல் இந்த ஸ்டிக்கரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் புகார் மனுக்களை அனுப்ப துவங்கியுள்ளனர்.