ஒரு முறை கூட திமுக, அதிமுகவை தேர்ந்தெடுக்காத தொகுதி இருக்கு.. தெரியுமா?
சென்னை: திமுக, அதிமுகவை ஒரு முறை கூட தேர்ந்தெடுக்காத ஒரு தொகுதி தமிழகத்தில் உள்ளது. அதுதான் ஓசூர்.
தமிழகத்தின் எல்லையாக உள்ள ஓசூர் தொகுதியிலிருந்து இதுவரை திமுக, அதிமுக ஒருமுறை கூட தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. எப்போது பார்த்தாலும் காங்கிரஸ் கட்சி ஜெயிக்கும் தொகுதி இது.
திராவிடக் கட்சிகளான, திமுகவும், அதிமுகவும் இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு அளித்து விடுவது வழக்கம். அப்படித்தான் இங்கு காங்கிரஸ் தொடர்ந்து வென்று வருகிறது.
தெலுங்கு ஆதிக்கம்
தெலுங்கு மொழி பேசுவோரும், கன்னட மொழி பேசுவோரும் அதிகம் உள்ள தொகுதி ஓசூர். இருப்பினும் தெலுங்கு பேசுவோர்தான் இங்கு பெரும்பான்மையினர். தற்போது அந்தத் தொகுதியிலிருந்து உறுப்பினராக உள்ளவர் கோபிநாத்.
முனி ரெட்டி முதல் கோபிநாத் வரை
இங்கு முதல் முறையாக உறுப்பினர் ஆனவர் சுயேச்சையாக நின்று வென்ற முனி ரெட்டி ஆவார். 1952ல் இவர் எம்.எல்.ஏ ஆனார். 57ல் அப்பாவு பிள்ளை உறுப்பினராக இருந்தார். 62ல் ராமச்சந்திர ரெட்டி உறுப்பினரானார். 67ல் வெங்கடசாமி உறுப்பினரானார்.
71 முதல் 89 வரை
71ல் சுதந்திரா கட்சியின் வெங்கடசாமி, 77ல் காங்கிரஸின் ராமச்சந்திர ரெட்டி, 80ல் இந்திரா காங்கிரஸின் வெங்கட ரெட்டி, 84ல் காங்கிரஸின் வெங்கட ரெட்டி, 89ல் காங்கிரஸின் ராமச்சந்திர ரெட்டி உறுப்பினராக இருந்தனர்.
1991 முதல் இன்று வரை
1991ல் காங்கிரஸின் கே.ஏ.மனோகரன் உறுப்பினரானார்,. 96ல் ஜனதாதளத்தின் வெங்கடசாமி வெற்றி பெற்றார். 2001ல் காங்கிரஸின் கே.கோபிநாத் வெற்றி பெற்றார். இவரே கடந்த 2006, 2011 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
ரெட்டி vs ரெட்டி
இந்த தேர்தலில் கோபிநாத் மீண்டும் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதிமுக இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிடுகிறார்.
9 முறை வென்ற காங்கிரஸ்
ஓசூர் தொகுதியில் இதுவரை மொத்தம் 9 முறை வென்றுள்ளது காங்கிரஸ். இரு ஒரு சாதனையாகும். இந்த சாதனையை கோபிநாத் தக்க வைப்பாரா அல்லது அதிமுக தட்டிப் பறிக்குமா.. பார்க்கலாம்.