தமிழர்களுக்கு வீடு வழங்க ரஜினி இலங்கை செல்வதில் தவறில்லை..பொன்.ராதாகிருஷ்ணன்
இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினி காந்த் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில்: தமிழர்களுக்கு வீடு வழங்க ரஜினி இலங்கை செல்வதில் தவறில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது.
நடிகர் ரஜினி காந்த் இலங்கைக்கு சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து குமரி மாவட்டம், பார்வதிபுரத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஆர்.கே நகரில் எப்படியாயினும் வென்று விடவேண்டும் என்ற கட்டாயத்தில் கழகக் கட்சிகள் உள்ளன. இதனால் அங்குள்ள வாக்காளர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கவும் அவை தயாராக உள்ளன.
பாரம்பரியமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இதற்கு காரணம் அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலே காரணம்.
தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினி காந்த் இலங்கை செல்வதில் என்ன தவறு உள்ளது என்றார் அவர்.