கர்ப்பிணிகள் கவனத்திற்கு! சோப்பு, ஷாம்பூவினால் கருச்சிதைவு அபாயம்!!
பீஜிங்: இன்றைக்கு தினசரி உபயோகிக்கும் சோப்பு, ஷாம்பு, லிப்ஸ்டிக்... முகத்திற்குப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக அளவில் பயன்படுத்தும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அண்மையில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் ஜியான்யிங், ஹுவான் ஷென் ஆகிய இரு ஆய்வாளர்கள் தலைமையிலான குழு 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
கருச்சிதைவுக்கு ஆளான 132 பெண்கள், ஆரோக்கியமான 172 கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரது சிறுநீர் மாதிரிகளை அந்தக் குழு பரிசோதித்தது.
அந்தப் பரிசோதனையில், கருச்சிதைவுக்கு ஆளான பெண்களின் சிறுநீரில் ‘தேலேட்டுகள்' எனப்படும் வகையிலான ரசயானப் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றாடம் பயன்படுத்தப்படும் சோப்பு, ஷாம்பூ, உணவுப் பொருள்களை அடைத்து வைப்பதற்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் ‘பாக்கெட்டு'களில் இந்த வகையிலான ரசாயனப் பொருள்கள் உள்ளன.
எனவே, அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தியதன் மூலமும், அடைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டதன் மூலமுமே ‘தேலேட்' ரசாயனப் பொருள்கள் பெண்களின் உடலுக்குள் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டது.
தொழிற்சாலைச் சூழல் அல்லாது, சாதாரண வீட்டுச் சூழலில் கூட, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மூலம் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருள்களை பெண்கள் உட்கொள்ளும் அபாயம் இருப்பது இந்தச் சோதனையின் மூலம்தான் முதல்முறையாகத் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வு இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இனி சோப்பு, ஷாம்பு உபயோகிக்கும் போது கவனம் தேவை எச்சரிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.