அதெப்படிங்க பதட்டத்துல புருஷன் பேரை மறக்க முடியும்.. என்ன சொல்கிறார் மாதவன்??
திண்டுக்கல்: வேட்பு மனுத் தாக்கலின்போது பதட்டத்தில் தனது பெயரை குறிப்பிட தீபா மறந்து விட்டதாக அவரது கணவரான மாதவன் கூறியிருப்பது ஆச்சரியத்தைக் கொடுப்பதாக உள்ளது.
எதை வேண்டுமானாலும் மறக்க முடியும். தன்னிலையைக் கூட ஒருவரால் மறந்து விட முடியும். ஆனால் கணவரின் பெயரையோ அல்லது மனைவியின் பெயரையோ ஒருவரால் பதட்டத்தில் மறந்து விட முடியுமா என்பது புரியவில்லை.
ஆனால் பதட்டத்தில் தனது பெயரை தீபா மறந்து விட்டதாக மாதவன் கூறுவதை அவரே முதலில் நம்ப மாட்டார். ஆனால் மக்களை நம்பச் சொல்கிறார்.
பாலக்காட்டு மாதவனுக்குப் பிறகு!
பாலக்காட்டு மாதவனுக்குப் பிறகு தமிழகத்தில் பிரபலமான பெயர் நடிகர் "மேடி" மாதவன். அதற்குப் பிறகு அந்தப் பெயர் பிரபலமானது தீபா மூலமாகத்தான். தீபாவின் கணவர்தான் மாதவன்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் லைம்லைட்டுக்கு வந்தார் தீபா. கூடவே கேமரா பிளாஷ் லைட்டுகளில் நனையத் தொடங்கினார் அவரது கணவர் மாதவன். தீபாவுக்கு கூடவே இருந்த அவர் திடீரென ஒரு நாள் இரவு திடீர் அரசியல்வாதியாக மாறினார்.
என் வழி.. தனி வழி
நான் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன். தீபாவைச் சுற்றி தீய சக்திகள் உள்ளன என்று கூறிய அவர் நான் ஆரம்பித்திருக்கும் கட்சியே, தீபாவை முதல்வராக்கும் நோக்கத்தில்தான் என்றும் கூறி எல்லோரையும் தெளிவாக குழப்பினார்.
கணவர் பெயரை மறந்த தீபா
இந்த நிலைில்தான் ஆர்.கே.நகரில் கடந்த வியாழக்கிழமை தீபா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவரது கணவரின் பெயரை குறிப்பிடாமல் விட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் மோதலா என்ற சர்ச்சை வெடித்தது. கணவர் பெயரையே குறிப்பிடாமல் தீபா விட்டது பலத்த விவாதங்களையும் எழுப்பியது.
அது பதட்டம்
இந்நிலையில் இன்று திண்டுக்கல் வந்தார் மாதவன். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக அவர் எனது பெயரை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார்.
என்னங்க சொல்றீங்க
இதுதான் செம காமெடியாக உள்ளது. அது எப்படி ஒருவரால் கணவரையோ அல்லது மனைவியையோ மறக்க முடியும் என்று தெரியவில்லை. அதை விட காமெடி, பதட்டம் என்று இவர் சொல்வதுதான். வேட்பு மனுவை வீட்டிலேயே ரெடி செய்துதான் கொண்டு வருவார்கள். அதைத்தான் கொண்டு வந்து ஒப்படைப்பார்கள். அப்படி இருக்கும்போது வேட்பு மனுவை நிரப்பும்போது அப்படி என்ன பதட்டம் தீபாவுக்கு. கட்டிய கணவர் பெயரையே மறக்கும் அளவுக்கு என்ன பதட்டம் வந்தது என்பது புரியவில்லை.
மேடிண்ணா நீங்களே கொஞ்சம் தெளிவா விளக்கிருங்களேன்!