ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ள எக்மோ கருவி எப்படி செயல்படும்..? 'டாக்டர்' தமிழிசை விளக்கம்
நுரையீரல் செய்யும் வேலையைத்தான் எக்மோ கருவி செய்யும் என்று தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தக் கருவி நுரையீரல் செய்யும் வேலையை செய்யும் என்று தமிழக பாஜக தலைவரும், டாக்டருமான தமிழிசை கூறியுள்ளார்.
ஜெயலலிதா உடல் நிலை குறித்து இன்று அப்போலோ மருத்துவமனை 13வது மருத்துவ அறிக்கையை அளித்துள்ளது. அதில் ஜெயலலிதாவிற்கு எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவி என்ன வேலையைச் செய்யும் என்று தமிழிசை விளக்கியுள்ளார். ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஒரு மருத்துவராக அவர் பேசியது:
தமிழக முதல்வர் குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அவர் உடல் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்பது தெரிகிறது. அவசர கட்டத்தில்தான் எக்மோ என்று சொல்லக் கூடிய கருவிகள் நோயாளிக்கு பொருத்தப்படும். இது பொருத்தப்பட்டால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம். இந்தக் கருவி பொருத்தப்பட்டதில் இருந்து ஜெயலலிதா அபாய கட்டத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது.
மனித உடலில் நுரையீரல் செய்யும் வேலையைத்தான் இந்த எக்மோ கருவி செய்கிறது. இந்தக் கருவியை பொருத்துவது அபாயமான நிலையில்தான் என்றாலும் பல நோயாளிகள் உயிர் பிழைத்து வந்துள்ளனர். அதே போன்று ஜெயலலிதாவும் நலம் பெற்று வீடு திரும்பி வருவார்.
அவர் உடல் நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருப்பது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நடவடிக்கைதான் என்று தமிழிசை கூறியுள்ளார்.