அதெப்படி செயற்கை சுவாசத்தில் இருந்த ஜெ. காவிரி குறித்து ஆலோசனை நடத்த முடியும்? செம்மலை 'பொளேர்'
அப்பல்லோவில் செயற்கை சுவாசத்தில் இருந்த ஜெயலலிதா காவிரி குறித்து ஆலோசனை நடத்தினாரா? என மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம்: ஜெயலலிதா மயக்கநிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசத்தில் இருந்த போது, அவர் காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினாரா என ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி சேலத்தில் மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. அப்போது செம்மலை பேசியதாவது:
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு என்ற காரணத்துக்காக அனுமதித்தாகக் கூறினார்கள். ஆனால் அவர் மயக்கமடைந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஜெயலலிதா தனிநபர் அல்ல. இந்த மாநிலத்தின் முதல்வர் என்னும்போது அவரை ஏன் அனாதையைப் போல் மருத்துவமனையில் யாருமற்று கொண்டு சேர்த்தனர்? அவருடைய கமாண்டோ படையை வேண்டாம் என கூறியது யார்?
செயற்கை சுவாசத்தில் இருந்த ஜெயலலிதா, எப்படி காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார்? ஜெயலலிதாவின் மரண அறிக்கை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
இவ்வாறு செம்மலை கூறினார்.